மும்பையில் பொதுமக்கள் முன்னிலையில்
நடிகைக்கு அடி-உதை
மும்பை, ஆக. 28:
மும்பையில் கடந்த வாரம் 22 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதன்மூலம் டெல்லியைப் போன்று மும்பையும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், மும்பை புறநகரில் டி.வி. நடிகை ஒருவரை, பொதுமக்கள் முன்னிலையில் 3 பேர் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல டி.வி. நடிகையான லவ்லீன் கவுர், ஆட்டோவில் சென்றபோது, அவரிடம் இருந்த மணிபர்சை ஒரு ஆசாமி பிக்பாக்கெட் அடித்துக் கொண்டு தப்பி ஓடினான். உடனே ஆட்டோவில் இருந்து இறங்கிய கவுர், பிக்பாக்கெட் ஆசாமியைத் துரத்தினார்.
ஆனால், சிறிது நேரத்தில் அவனுடன் மேலும் இரண்டு வாலிபர்கள் சேர்ந்து, கவுரை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தும், யாரும் தடுக்க முன்வரவில்லை.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த கவுர் உதவி கேட்டு அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் ஒருவனைத் தேடி வருகின்றனர்.













0 கருத்துகள்